/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றை பராமரிக்காமல் நீர்வளத்துறை... மெத்தனம்!
/
பாலாற்றை பராமரிக்காமல் நீர்வளத்துறை... மெத்தனம்!
ADDED : ஜன 08, 2024 04:54 AM

காஞ்சிபுரம் : பாலாற்றின் நடுவே, சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் வாயிலாக குடிநீர் திருட்டு, ஆயிரக்கணக்கான மரங்கள் முளைத்து காடு போல மாறியது மற்றும் ஆற்றின் கரைகளில் குப்பை கொட்டுதல் தொடர்வது, நீர்வளத்துறை பராமரிப்பு இல்லாததால், பாலாற்றின் நிலைமை மோசமாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திதுர்கம் மலையில், பாலாறு உற்பத்தியாகிறது. கர்நாடகாவில், 93 கி.மீ., ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ., துாரம் பாய்கிறது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 90 கி.மீ., பாய்ந்து, வாயலுாரில் கடலில் கலக்கிறது.
பாலாறு பாயும் படுகையின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய் வாயிலாக, 4 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலாக, பாலாற்றை நம்பி விவசாய பணிகள் நடக்கின்றன. மேலும், ஐந்து கூட்டு குடிநீர் திட்டம், பாலாற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
கவலை
இதன் காரணமாகவே, பெரும்பாக்கம், வெங்குடி, பாலுார் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பாலாற்றின் பராமரிப்பு, நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரும்பாக்கத்தில் துவங்கி, பாலுார் வரை 30 கி.மீ., துாரம் வரை பாலாறு செல்கிறது. இதற்கிடையே, பாலாற்றின் நிலைமை மோசமானதாக உள்ளது.
போதிய பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில், குப்பை கழிவுகளை பலரும் இஷ்டம் போல் கொட்டி வருகின்றனர். ஓரிக்கை, செவிலிமேடு போன்ற இடங்களில் மேம்பாலம் அருகே குப்பை கொட்டுவது தொடர்கிறது.
அதேபோல, 1 கி.மீ., துாரம் அகலம் உடைய பாலாற்றின் இரு கரைப்பகுதிகளிலும், கருவேல மரங்களும், வேலிகாத்தான், வேங்கை உள்ளிட்ட பல வகையான மரங்கள் வேரூன்றி பெரிய அளவில் வளர்ந்துள்ளன. ஆற்றின் நடுவே காடு போல் மரங்கள் வளர்ந்துள்ளன.
இவற்றை நீர்வள ஆதாரத்துறை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக அவற்றை அகற்றாமல் அலட்சியம் காட்டுவதால், மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் முளைக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்படுகிறது.
பராமரிப்பு இல்லை
பாலாற்றின் நடுவே, சட்ட விரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக, வாலாஜாபாத் அருகே பல இடங்களில் சட்ட விரோத ஆழ்துளை கிணறுகள் இன்றைக்கும் செயல்படுகின்றன.
அவற்றை கண்டறிந்து, பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் இல்லாததால், இஷ்டம் போல் குடிநீர் திருட்டு நடக்கிறது.
அதேபோல், பாலாற்றிலிருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் மோசமான நிலையில் உள்ளன.
குறிப்பாக, பினாயூர், அரும்புலியூர் கால்வாய்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. கால்வாயின் உண்மையான அகலத்தை கண்டறிய, சர்வே பணிகள் நடந்தன. ஆனால், அப்பணிகளும் தொய்வடைந்ததால், பினாயூர் கால்வாயை முழுமையாக மீட்க முடியாமல் உள்ளன.
அதேபோல், பாலாற்றில் இருந்து பிரியும் கம்ப கால்வாய், காஞ்சிபுரம் அருகே தைப்பாக்கத்தில் துவங்கி, 43 கி.மீ.,துாரம் பயணித்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது. பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த கால்வாய் வாயிலாக, பாலாற்றின் நீரை, 80 ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கால்வாய் முழுதும் மரம் முளைத்தும், செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இந்த கால்வாயும் பராமரிப்பில்லாமல் உள்ளது.
பாலாற்றையும், நீர்வரத்து கால்வாயையும் பராமரிக்க வேண்டிய நீர்வள ஆதாரத்துறையினர், போதிய நிதி கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.
நிதி ஆதாரம் இல்லாததால், நீர்நிலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதற்கும் சிரமம் ஏற்படுவதாக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சட்ட விரோதம்
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை கொண்டு, ஏரியின் கலங்கல், மதகு, கரை போன்றவை சீரமைக்க பயன்படுத்துகிறோம். பாலாற்றை சீரமைக்க தனியாக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யவில்லை.
'சட்டவிரோத ஆழ்துளை கிணறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் இல்லை. பாலாறு பராமரிப்புக்கு, நிதி கேட்டு அரசுக்கு நாங்கள் ஏற்கனவே எழுதிஉள்ளோம்' என்றார்.