ADDED : செப் 21, 2024 01:35 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25,000 ஏக்கரில் சொர்ணவாரி, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்த விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணி நடந்து வருகின்றன.
அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் வைக்கோலை ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.
நகரங்களில் மாடு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் கோ சாலைகளில் மாடுவைத்திருக்கும் விவசாயிகள் மொத்தமாக லாரிகள் மற்றும் சிறிய ரக லோடு வாகனங்களில் வைக்கோலை ஏற்றி செல்கின்றனர்.
காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமங்களில், கட்டு கட்டும் இயந்திரத்தின் மூலமாக வைக்கோலை சேகரித்து லாரிகளில் ஏற்றி செல்கின்றனர்.
ஒரு சில வாகனங்களில் பாதுகாப்புடன் எடுத்து செல்கின்றனர். சிறிய ரக வாகன ஓட்டிகள் தார்பாய் போடாமல் வைக்கோல் கட்டுகளை எடுத்து செல்கின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் சாலை வழியாக, சிறிய ரக லோடு வாகனங்களில் எடுத்து செல்லும் வைக்கோல் கட்டுகள் அளவுக்கு அதிகமாக எடுத்து செல்கின்றனர். மேலும், வாகனங்களில் பாதுகாப்பாக எடுத்து சென்றாலும், காற்றிற்கு வைக்கோல் பறந்து சாலையில் விழுகிறது.
அந்த சாலை வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்களால், வைக்கோல் பறந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகளில் கண்களை பதம் பார்ப்பதால், வாகன ஓட்டிகள் மருத்துவ சிகிச்சைக்கு செலவிட வேண்டி உள்ளது.
எனவே, வைக்கோல் கட்டு ஏற்றி செல்லும் லாரிகள் மீது, தார்பாய் பாதுகாப்புடன் வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்ல வேண்டும் என, வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்க வேண்டும் என, எதிபார்ப்பு எழுந்துள்ளது.