/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
/
அங்கன்வாடி மையம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 16, 2025 02:18 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, ஆனைப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி, சித்திரை ஆகிய மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலுக்கு அருகே காலியிடம் உள்ளது. இந்த காலி இடத்தில், அப்பகுதி மக்கள் பொங்கல் வைக்கவும், கும்பாபிஷேகம் நடக்கும் நேரங்களில் யாக சாலை அமைக்கவும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, காலியிடத்தில் அங்கன்வாடி மையம் கட்டும்பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காலியிடத்தில், அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
ஆனைப்பள்ளம் கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவில் அருகே உள்ள காலியிடம் கோவில் புறம்போக்கு வகையில் உள்ளது. இந்த இடத்தை, பொங்கல் வைக்கவும், சாமியை அலங்காரம் செய்து, கோவிலை சுற்றிவர பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது, இங்கு அங்கன்வாடி மையம் கட்டுவதால், போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்படும். எனவே, கோவில் அருகே உள்ள இடத்தில், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.