/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராமப்புற தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய... மறந்துட்டோமுங்க...:கால்நடை மருத்துவர்கள் அலட்சிய பதிலால் அதிருப்தி
/
கிராமப்புற தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய... மறந்துட்டோமுங்க...:கால்நடை மருத்துவர்கள் அலட்சிய பதிலால் அதிருப்தி
கிராமப்புற தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய... மறந்துட்டோமுங்க...:கால்நடை மருத்துவர்கள் அலட்சிய பதிலால் அதிருப்தி
கிராமப்புற தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய... மறந்துட்டோமுங்க...:கால்நடை மருத்துவர்கள் அலட்சிய பதிலால் அதிருப்தி
ADDED : அக் 23, 2025 09:52 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கிராமப்புறங்களில், மக்களுக்கு பீதியூட்டும் வகையில் திரியும் தெரு நாய்களுக்கு, கால்நடை மருத்துவர்கள் கருத்தடை செய்வதில்லை என ஊராட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், போதிய கட்டமைப்பு வசதி இல்லாதது, மற்ற பணிகளால் நாய்களுக்கு கருத்தடை செய்ய மறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுவதாகவும், அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 106 கால்நடை மருந்தகங்கள், 38 கிளை நிலையங்கள், மூன்று தலைமை மருத்துவமனை, ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் என, 148 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.
இதில், 20வது கால்நடைகள் கணக்கெடுப்பின்படி, 19,652 எருமை மாடுகள், 1.68 லட்சம் கறவை மாடுகள், பன்றிகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், நாய்கள், கோழிகள் என, மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.
இம்மருத்துவமனைகளில், குடற்புழு நீக்கம், வெறிநாய் கடி, இனப்பெருக்கம், காய்ச்சல் ஆகிய பல்வேறு விதமான நோய்களில் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 28,344 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை. இதனால், கிராமங்களில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகமாகியுள்ளது என, கிராம மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கட்டுப்படுத்த வேண்டும் என, கிராமப்புற மக்கள் காஞ்சி புரம் கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர். அந்த மனு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு நாய் பிடிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், கால்நடை துறையினர் ஒத்துழைப்பு அளிக்காததால், நாய்களை பிடிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
இதனால், கிராமப்புறங்களில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதிய வசதிகள் இல்லையென கிராமப்புற கால்நடை மருத்துவர்கள் நழுவுவதாக, உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிடாத ஊராட்சி தலைவர் கூறியதாவது:
நாய்களை பிடிக்க வேண்டும் என, கிராம மக்கள் புகார் அளிக்கும் மனு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக என்னிடம் வருகிறது. கால்நடை துறை உதவியை நாடினால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.
நாய்களுக்கு கருத்தடை செய்யும்படி கோரிக்கை வைத்தாலும், இங்குள்ள மையங்களில் செய்ய முடியாது என, கால்நடை மருத்துவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர்.
தவிர, மற்ற பணிகளால் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதை மறந்துவிட்டோம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் அலட்சியத்தால், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, தெருக்களில் விளையாடும் குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், நாய்க்கடிக்கு உள்ளாகும் நிலை உள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்த, அவற்றுக்கு உடனே கருத்தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஏற்ப, கிராமப்புற கால்நடை மருத்துவ மனைகளில் உபகரணங் களுடன்கூடிய கட்டட வசதி இல்லை. இருப்பினும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பெரு நகர மருத்துவமனைகளில் செய்கின்றனர்.
மேலும், கிராமப்புற கால்நடை மருத்துவர்களுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், நாய்களுக்கு கருத்தடை செய்வது குறித்து விளக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 100 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை மையங்கள் துவக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி யில், சில மையங்கள் அமைக்க உள்ளோம். கிராமப்புறங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், வட்டாரத்திற்கு ஒரு மையத்தை துவக்க அனுமதி கேட்டுள்ளோம். விரைவில், அனுமதி கிடைக்கும் என காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாய்கள் தொல்லை தெரு நாய், மற்றொரு நாயுடன் சண்டையிட்டு வாகனங்களின் குறுக்கே சென்று விழுந்து விடுகிறது. இதுபோன்ற நேரங்களில், வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுகிறது. யாரேனும், சண்டையிடும் நாய்களை துரத்தும் போது, நாய்கள் கடிக்க ஓடி வருகிறது. அதனிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடிக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில், கடித்து விடுகிறது. தடுப்பூசி போட மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது.
- நா. அசோக்குமார், விவசாயி, உத்திரமேரூர்.