/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மிக்ஜாம்' புயலால் நாசமான பயிருக்கு இழப்பீடு எப்போது?
/
'மிக்ஜாம்' புயலால் நாசமான பயிருக்கு இழப்பீடு எப்போது?
'மிக்ஜாம்' புயலால் நாசமான பயிருக்கு இழப்பீடு எப்போது?
'மிக்ஜாம்' புயலால் நாசமான பயிருக்கு இழப்பீடு எப்போது?
ADDED : பிப் 22, 2024 11:29 PM
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,835 விவசாயிகளுக்கு, 'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதி அரசு விடுவித்த போதும், பேரிடம் மேலாண் துறையில் இருந்து, வேளாண் துறை வங்கி கணக்கிற்கு நிதி இன்னும் வராததால், இழப்பீடு கிடைக்காமல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், காஞ்சிபுரம், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களில், விவசாயிகள் நெல், காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைப்பொருட்களை, சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண் அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
'மிக்ஜாம்' புயலுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5,627.5 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. தமிழக அரசு, ஒரு ஏக்கருக்கு, 6,800 ரூபாய் இழப்பீடு அறிவித்து உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம்ஒன்றியத்தில், 935 விவசாயிகளுக்கு, 91 லட்சம் ரூபாயும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 2,202 விவசாயிகளுக்கு, 2.23 கோடி ரூபாயும், உத்திரமேரூர் ஒன்றியத்தில், 161 விவசாயிகளுக்கு, 12 லட்சம் ரூபாயும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 392 விவசாயிகளுக்கு, 33 லட்சம் ரூபாயும், குன்றத்துார் ஒன்றியத்தில், 145 விவசாயிகளுக்கு, 33 லட்சம் ரூபாய் என, 3,835 விவசாயிகளுக்கு, 3.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், விவசாயிகளுக்கு இதுவரை, கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரிடர் மேலாண் துறையில் இருந்து ஒதுக்கப்படும் நிதி, வேளாண் துறை வங்கி கணக்கிற்கு வந்த பின், ஓரிரு நாட்களில் 'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதி விடுவிக்கப்படும் என, வேளாண் துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
நெல் அறுவடை நேரத்தில் இருக்கும் நெற்கதிர்கள், நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைப்பு ஏற்பட்டு இருப்பதால், ஒரு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் வரை இழப்பீடு வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு, அரசு செவி சாய்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலர் நேரு கூறியதாவது:
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு, 1 ஏக்கருக்கு, 40,000 ரூபாய் இழப்பீடு கேட்டோம். அரசு, 1 ஏக்கருக்கு, 6,800 ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.
இந்த நிதியை, லோக்சபா தேர்தலுக்கு முன், விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும். மேலும், விடுபட்டோருக்கு முறையாக ஆவணங்கள் பெற்று வழங்க வேண்டும். இதேபோல, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு அறிவித்த நிவாரண நிதியை, வேளாண் வங்கி கணக்கில் இருந்து, அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.