/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலிபர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்
/
வாலிபர் சாவில் மர்மம் மனைவி போலீசில் புகார்
ADDED : செப் 28, 2024 07:21 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 35; இவருக்கு, பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர், மாங்கல் பகுதி சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அன்று, இரவு 11:00 மணி அளவில், உத்திரமேரூர் அடுத்த, காட்டுப்பாக்கம் சாலையில், முருகன் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் முருகன் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதனிடையே, அவரது மனைவி பாக்கியலட்சுமி, கணவர் முருகனுக்கு விரோதிகள் உள்ளதாகவும், இதனால், அவர் கொலை செய்து சாலையோரம் வீசி இருக்கலாம் என, போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.