ADDED : ஜன 03, 2026 05:23 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாதில், புத்தாண்டு நிகழ்ச்சிக்காக நடப்பட்டிருந்த இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து, கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
வாலாஜாபாத் பேரூராட்சி, இந்திரா நகரில், புத்தாண்டு விழாவிற்காக அப்பகுதி தெரு ஓரத்தில் வரிசையாக இரும்பு கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு வரை கொடி கம்பம் அகற்றப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்திராநகர் 2வது தெருவை சேர்ந்த சின்னதம்பி, 58 என்ற கூலித்தொழிலாளி, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அங்கிருந்த மழைநீர் வடிகால்வாயை கடந்து செல்ல, தெரு ஓரம் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை பிடித்து தாண்டியுள்ளார்.
அப்போது, மின்கம்பத்தை ஒட்டி மேலே சென்ற மின் கம்பி உரசியதில், மின்கம்பம் வழியே மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சென்று, அவரது உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
