கண்ணாடி கூண்டு வழியாக காட்சி அளிக்கும்கரூர் தான்தோன்றிமலை கோவில் தேர்
கண்ணாடி கூண்டு வழியாக காட்சி அளிக்கும்கரூர் தான்தோன்றிமலை கோவில் தேர்
ADDED : ஜன 24, 2025 01:14 AM
கரூர், :கரூர், தான்தோன்றிமலை கோவில் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் தேரை பார்த்து தரிசனம் செய்ய முடியும்.
திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள், வயதானவர்கள், தான்தோன்றிமலையில் உள்ள வெங்கடரமண பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது தனி சிறப்பு. இக்கோவில், 12ம் நுாற்றாண்டை சேர்ந்தது; குடைவறை கோவில் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல், சோமசன்மா என்ற பக்தர் மிகவும் மனம் வருந்தி இருந்தார். அப்போது, அந்த பக்தருக்காக திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால், இக்கோவில் தான்தோன்றிமலை என்ற பெயர் பெற்றது.
இங்கு, புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த, மறுநாள் கோவிலில் கொடியேற்றப்பட்டு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா நடக்கும். அதில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடக்கும். இந்த விழா முடிந்த பின், கோவில் வளாகத்தில் தேர் நிறுத்தி வைக்கப்படும். தேரோட்டம் முடிவடைந்த நிலையில், இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது.
இதையடுத்து, தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில், கண்ணாடி கூண்டு அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்க ஹிந்துசமய அற
நிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, பக்தர்கள் பார்த்து ரசிக்கும் வகையில், கோவில் நிதியில் இருந்து, 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில், கண்ணாடி யில் செய்யப்பட்ட கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
விழா காலங்களில் மட்டுமே தேரை பொது மக்கள் பார்த்து தரிசனம் செய்து வந்தனர். தற்போது, நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தேரை பார்த்து தரிசனம் செய்யலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
