கரூரில் கொசு உற்பத்தி மீண்டும் அதிகரிப்புபொதுமக்கள் துாங்க முடியாமல் அவதி
கரூரில் கொசு உற்பத்தி மீண்டும் அதிகரிப்புபொதுமக்கள் துாங்க முடியாமல் அவதி
ADDED : மார் 10, 2025 01:21 AM
கரூரில் கொசு உற்பத்தி மீண்டும் அதிகரிப்புபொதுமக்கள் துாங்க முடியாமல் அவதி
கரூர்கோடைகாலம் துவங்க உள்ள நிலையில், நாள்தோறும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கரூர் மாநகராட்சி பகுதியில், தற்போது பெரிய அளவிலான கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் இரவு நேரத்தில் துாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட, கரூர் மாநகராட்சி பகுதியை சுற்றி அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது மழைநீருடன், சாக்கடை நீரும் செல்கிறது. இதனால், கரூர் மாநகராட்சி பகுதியில் பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மிகப்பெரிய அளவிலான கொசுக்கள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், வெயில் தாக்கம் காரணமாக புழுக்கம் தாங்க முடியாமல், பொதுமக்கள் இரவில் வீட்டு மொட்டை மாடி, திறந்த வெளிப்பகுதிகளில் துாங்குகின்றனர். ஆனால், கொசுக்கடியால் துாங்க முடியாமல் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
