ADDED : அக் 20, 2024 01:27 AM
கரூர், அக். 20-
நடப்பாண்டு, தென் மேற்கு பருவமழை துவங்கும் முன், கரூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவு மழை பெய்ததால், மானாவரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். வழக்கமாக ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, முருங்கைகாய்க்கு சீசன் காலமாகும்.
தற்போது கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள மார்கெட்டுக்கு முருங்கைகாய் வரத்து, கடந்த ஒரு வார காலமாக சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் காரணமாக, கடந்த மாதத்தை விட, தற்போது முருங்கைகாய் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, முருங்கை வியாபா
ரிகள் கூறியதாவது: அரவக்குறிச்சி வட்டாரத்தில், செடி முருங்கை, மரம் முருங்கை மற்றும் கொடி முருங்கை என மூன்று வகை முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, சீசன் நிறைவு பெறும் நிலையில், முருங்கைகாய் வரத்து குறைய துவங்கியுள்ளது. ஆனால், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிகளவில் நடந்து வரும் நிலையில் முருங்கைகாய், கீரை மற்றும் பூ வகைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதில் செடி முருங்கை, கொடி முருங்கை இரண்டு அடி முதல், மூன்று அடி வரை வளரும். இந்த ரகங்கள் கடந்த செப்டம்பர் மாதம், கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை விற்றது. தற்போது, 40 முதல், 50 ரூபாய் வரை விற்கிறது. ஒரு காய் ஐந்து முதல், எட்டு ரூபாய் வரை விற்கிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.