ADDED : மார் 04, 2025 01:29 AM
குண்டும், குழியுமான சாலையால் அவதி
கரூர்:கரூர் அருகே, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ள சாலையில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி, பெரிய கோதுார் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கரூர் நகர பகுதிக்கு, பெரிய குளத்துப்பாளையம் வழியாகவும், ஈரோடு சாலைக்கு மூர்த்திபாளையம் வழியாகவும் செல்ல வேண்டும்.
ஆனால், பெரியகோதுாரில் இருந்து மூர்த்திபாளையம் வரையிலும், பெரிய குளத்துப்பாளையம் வரையிலுமான சாலைகள், பல மாதங்களாக குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், அந்த சாலைகளில் தெரு விளக்குகளும் இல்லை.
இதனால், பெரிய கோதுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரூர் நகர் மற்றும் ஈரோடு சாலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் தடுமாறி கீழே விழுகின்றனர்.
எனவே, பெரிய குளத்துப்பாளையம் முதல் மூர்த்திப்பாளையம் வரை, பெரிய கோதுார் சாலையை உடனடியாக சீரமைக்க, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.