/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மகளிர்போலீஸ் ஸ்டேஷன் தேவை
/
அரவக்குறிச்சியில் மகளிர்போலீஸ் ஸ்டேஷன் தேவை
ADDED : மார் 20, 2025 01:12 AM
அரவக்குறிச்சியில் மகளிர்போலீஸ் ஸ்டேஷன் தேவை
அரவக்குறிச்சி:பெண்கள் புகார் அளிக்க பரமத்தி அல்லது கரூர் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், அரவக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 18 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி ஆகியவை முக்கிய பகுதிகளாக உள்ளன. தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி, 40 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது.
ஆனால், இங்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லை. பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சி பகுதியில் இருந்து, 30 கி.மீ துாரமுள்ள கரூர் மகளிர் ஸ்டேஷன் அல்லது 35 கி.மீ., துாரமுள்ள க.பரமத்தி மகளிர் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய சிரமமான நிலை
உள்ளது.மேலும் கணவர், மாமியார் கொடுமை, வீடு மற்றும் பொது இடங்களில் பாலியல் தொந்தரவு, பெண்களிடம் மட்டுமே சொல்லக்கூடிய பிரச்னைகள் என்று பல்வேறு வகையில் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்களுக்கெல்லாம், பெண்கள் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுதான் புகார் கூறும் நிலை உள்ளது.
எனவே, குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.அரவக்குறிச்சியில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க உயர் அலுவலர்களிடமும், கிராம சபை கூட்டங்களிலும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, விரைவில் அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைவர்.