/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய வடிகால் கழிவுநீர் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
புதிய வடிகால் கழிவுநீர் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புதிய வடிகால் கழிவுநீர் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புதிய வடிகால் கழிவுநீர் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 31, 2024 04:17 AM
கரூர்: மாயனுார் கதவணை அருகே சரிந்த, பழமை வாய்ந்த, வடிகால் கழிவுநீர் பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், மாயனுார்-கட்டளை பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் கரையோர பகுதியில், கும்பகுழி என்ற இடத்தில், 1924ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வடிகால் கழிவுநீர் பாலம் கட்டப்பட்டது. அதன்மூலம், கட்டளை முதல் மாயனுார் வரை பொதுமக்கள் வாகனங்களில் சென்று வந்தனர். மேலும் வலது பகுதியில், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் ஆகியவை, மேல மாய னுார் அருகே, கும்ப குழியில் உள்ள வடிகால் வாய்க்கால் மூலம் காவிரியாற்றில் கலக்கும்.
இந்நிலையில் கடந்த, 2022ல் கும்ப குழியில் உள்ள வடிகால் கழிவு நீர் பாலத்தின், ஒரு பகுதி சரிந்தது. இதையடுத்து, கட்டளை-மாயனுார் சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்லாத வகையில், மணல் மூட்டைகள் வைக்கப்பட்டது. இதனால் மாயனுாரில் இருந்து கட்டளை, ரங்கநாதபுரம், மேலமாயனுார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு, பொதுமக்கள் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.
கடந்த சில மாதங்களாக, சரிந்த வடிகால் பாலத்தின் கீழ் பகுதியில், 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாயனுார் பகுதியில் இருந்து கட்டளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு, வாகனங்கள் மூலம் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழமை வாய்ந்த, வடிகால் கழிவுநீர் பாலம் என்பதால், மீண்டும் சரிவு ஏற்படும் முன், கும்பகுழி பகுதியில், புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

