ADDED : ஜூன் 21, 2026 03:55 AM

கரூர்:கரூர் மாவட்டத்தில் இன்று, 1,733 மாணவ, மாணவியர் 'நீட்' தேர்வு எழுதுகின்றனர்.
நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்.,-- பி.டி.எஸ்., மற்றும் சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை எனும் என்.டி.ஏ., நடத்துகிறது. கடந்த மே, 3ல் 'நீட்' நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று நடக்கிறது தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வை, 1.42 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
கூடுதலாக 15 நிமிடம்
நீட் தேர்வு கட்டணத்தை, மாணவர்களுக்கு திருப்பி கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக, 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வை பாதுகாப்பாக நடத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்தில், 5 மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில், கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், இரண்டு மையங்களில், 960 மாணவ, மாணவியர், கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 240 மாணவ, மாணவியர், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 96 மாணவ, மாணவியர், கரூர் பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 437 மாணவ, மாணவியர் என மொத்தம், 1,733 தேர்வு எழுதுகின்றனர்.
அரசு பள்ளிகளில் தேர்வு மையம்
இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளே தேர்வு மையங்களாக உள்ளன. அனைத்து மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் அவசர மருத்துவ தேவைகளுக்கு, 4 மருத்துவ குழுக்களில், 12 மருத்துவ பணியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு, 6 தீயணைப்பு வாகனங்களுடன், 17 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு நடக்கும் இடங்களில், 46 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுடன் வரும் பெற்றோர்களுக்காக தனியே காத்திருப்பு அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்த இட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
