ADDED : ஏப் 26, 2026 05:30 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன், 38; சொந்தமாக ஆட்டோ வைத்து, தொழில் செய்து வருகிறார். கடந்த, 23ல், ராஜேந்திரம் அக்ரஹாரம் வழியாக, பாண்டியராஜன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சிவன் கோவில் அருகே, ராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்த சஞ்சய், 23, கார்த்திக், 24, ஆகிய இருவரும் சாலை நடுவே நடந்தபடி சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ செல்ல வழியில்லாததால், ஓரமாக செல்ல வேண்டியது தானே என, ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், கார்த்திக் ஆகிய இருவரும், தகாத வார்த்தையால் பேசி, பாண்டியராஜனை தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பாண்டியராஜன், குளித்தல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து பாண்டியராஜனின் தம்பி ராஜா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் சஞ்சய், கார்த்திக் ஆகிய, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
