/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
68,054 கிலோ சோளம் விதை கொள்முதல்: கலெக்டர் தகவல்
/
68,054 கிலோ சோளம் விதை கொள்முதல்: கலெக்டர் தகவல்
ADDED : டிச 22, 2024 01:40 AM
கரூர், டிச. 22-
தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகத்தின் மூலம், 68,054 கிலோ சோளம் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரம் தாலுகா, முனையனுார் கிராமத்தில் தமிழக அரசின் சாகுபடி மானியம் பெற்ற இடத்தை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், பல்வேறு விவசாயிகளின் நிலத்தில், சாகுபடி மானியம் வழங்கி தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகளை, அரசின் விதை பண்ணைகளில் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகம் மூலம் நெல், சிறுதானிய விதைகள், பயறு விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்திட விதை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10 வகையான நெல் ரகங்கள், 117 ஹெக்டர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு, 67,053 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 5.36 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் மூலம் சோளம் 68,054 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 20.42 லட்சம் லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது, கம்பு, 6,574 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 1.98 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது, உளுந்து 30,710 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 7.7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, துவரை 3,383 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 84 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, நிலக்கடலை 68,457 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 17.12 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, எள், 1,300 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு, 32 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக பல்வேறு தானியங்கள் பல்வேறு திட்டங்களில், 2,45,530 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு அவைகளுக்கு, 53.71 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.