/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தூய்மை பாரத இயக்கத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
/
தூய்மை பாரத இயக்கத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 18, 2024 01:04 PM
கரூர்,: கரூர் மாவட்டத்தில், துாய்மை பாரத இயக்கத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்ட பிரிவின் சார்பில் ஊரக பகுதிகளின் தகவல், கல்வி, தொடர்பு பணிகளுக்கு புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தகவல், கல்வி, தொடர்பு குழுவில் இரு பணியிடத்துக்கு, கல்வித்தகுதியாக ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்ற சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு ஊதியமாக சேவை வரி உள்பட, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும் மூன்றாண்டுகள் வரை, பொதுத்துறை தொடர்பு மற்றும் அரசு அல்லது தனியார் துறையில் சமூக ஊடக பிரிவுகளில் பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். கணினி கையாளுவதில் திறமையும், வீடியோ தயாரிப்பு, மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்களை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ், ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் திறன் வேண்டும். விண்ணப்பங்களை வரும், 20-க்குள் மேலாளர், மாவட்ட முகமை, மாயனுார், கரூர் -639 108 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.