/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவுளி உள்பட பல துறைகளில் வளர்ச்சிக்கான பட்ஜெட்
/
ஜவுளி உள்பட பல துறைகளில் வளர்ச்சிக்கான பட்ஜெட்
ADDED : பிப் 02, 2026 06:25 AM
கரூர்: ஜவுளி உள்பட பல்வேறு துறைகளின், வளர்ச்சிக்கான வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என, கரூர் தொழில் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன மாநில செயலாளர் மோகன்: கடந்த பட்ஜெட்டை விட, 1.63 லட்சம் கோடி நிதி வேளாண் துறைக்கு ஒதுக்கீடு என்பது பாராட்டத்தக்கது. அறுவடை, பயிர் பாதுகாப்பிற்கு அதிக செலவு செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். தமிழ்நாட்டில் அறுவடை காலத்தில் திடீர் மழை காரணமாக, நெல் பயிர் சேதாரம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது. இதற்கு நேரடி கொள்முதல் நிலையங்களிலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் நெல் உலர்த்தும் சாதனம் நிறுவ பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதை நடைமுறை படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
கரூர், பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் குப்புராவ்: வங்க தேசம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை தடுக்கும் வகையில், 2024ல் மத்திய அரசின் சார்பில் அடக்கவிலை கிலோ, 3.5 டாலருக்கு குறைவான கொசு வலைகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடையிலிருந்து தப்பிக்கும் வகையில், 3.6 டாலராக பில் செய்து இறக்குமதி செய்கின்றனர். இதனை தடுக்க கூடுதல் சுங்க வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு இறக்குமதி கொசு வலைக்கு, கிலோவுக்கு, 113 ரூபாய் அல்லது 20 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. அழியும் நிலையில் உள்ள தொழிலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பாற்றியுள்ளார்.
கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலாளர், வெங்கட்ராமன்: திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, டிசம்பரில் இருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உள்கட்டமைப்பு விரிவுப்படுத்த நிதி ஒதுக்கி இருப்பதை வரவேற்கிறோம். நெல் சாகுபடி செய்யும் காலத்தில், நெல்லை சேமிக்க கிடங்கு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்தோம். அது தொடர்பாக அறிவிப்பு வரவில்லை.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்: மத்திய அரசின் பட்ஜெட் திட்டங்களால், கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகியவற்றில் செயல்படும் ஜவுளி துறையினருக்கு நன்மையை அளிக்கும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், கடன் உத்தரவாத வரம்பு, 5 கோடியில் இருந்து, 10 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதையும், செயல்மூலதன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதும் பயனளிக்கும் திட்டங்கள் ஆகும். மேலும், மேன்மேட் பைபர், டெக்னிக்கல் ஜவுளி, பி.எம்., மித்ரா பூங்கா திட்டங்கள், தொழில் நுட்ப மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.லகு உத்யோக் பாரதி அமைப்பின், கரூர் மாவட்ட தலைவர் ராம்பிரகாஷ்: சிறு தொழில் வளர்ச்சிக்கு வங்கி கடன், உற்பத்தி ஆதரவு, உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்படுகிறது. புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்க, 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை- புனே, ஐதராபாத்-சென்னை, புனே- ஐதராபாத் இடையே அதிவிரைவு ரயில் தடங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு, உள்கட்டமைப்புக்கான, 12.20 லட்சம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தொழில்துறையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம்: மத்திய பட்ஜெட்டில், தென்னை விவசாயத்தில் போட்டித்தன்மையை அதிகரிக்க தென்னை மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்படும். கேரளா உள்ளிட்ட முக்கிய தென்னை வளர்ப்பு மாநிலங்களில் புதிய தென்னங்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பவை வரவேற்புக்கு உரியவை. ஆனால், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவரை முறையாக செயல்படுவது கிடையாது.

