/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளக்கரையை சேதப்படுத்தியதாக புகார்
/
குளக்கரையை சேதப்படுத்தியதாக புகார்
ADDED : மார் 03, 2025 07:30 AM
கரூர்: கரூர் அருகே, சீரமைக்கப்பட்ட குளத்தின் கரைகள் சேதப்படுத்தப்பட்டதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து வெண்ணைமலையில், பல ஆண்டுகளாக குளம் உள்ளது. அதில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், (2019---20) நீர்வள ஆதார பாதுகாப்பு இயக்கம் மற்றும் குடிமராமத்து பணிகள் திட்டத்தில், 54,000 ரூபாய் செலவில் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதைதொடர்ந்து, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதியில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் குளத்தின் கரைகளை, சாலை விரிவாக்கம் என்ற பெயரில், சேதப்படுத்தியதாக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வெண்ணைமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: வெண்ணைமலை குளம் பல ஆண்டுகளாக உள்ளது. அதில், தேங்கும் தண்ணீரில் பொது மக்கள் குளித்து விட்டு அருகில் உள்ள, பால சுப்பிரமணியர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நாளடைவில் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக, குளத்துக்கு தண்ணீர் வருவது நின்றது. இதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், குளத்தின் கரைகள் இடிக்கப்பட்டு, கரையில் இருந்த மண் குளத்தில் கொட்டப்பட்டுள்ளது. மீண்டும் குளத்தின் கரைகளை, பலப்படுத்த வேண்டும்.
மேலும், குளத்தின் கரையில், கடந்த, 2016-17ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, நான்கு லட்சத்து, 90,000 ரூபாய் மதிப்பில் போர்வெல் குழாய் அமைக்கப்பட்டது. அந்த போர்வெல் குழாயையும் காணவில்லை. இதனால், புதிதாக போர்வெல் போட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.