/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தொடர் மழையால் மண் விளக்கு உற்பத்தி பாதிப்பு
/
கரூரில் தொடர் மழையால் மண் விளக்கு உற்பத்தி பாதிப்பு
கரூரில் தொடர் மழையால் மண் விளக்கு உற்பத்தி பாதிப்பு
கரூரில் தொடர் மழையால் மண் விளக்கு உற்பத்தி பாதிப்பு
ADDED : நவ 25, 2025 02:09 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பெய்து வரும் தொடர் மழையால், களிமண் விளக்குகள் தயாரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்துகளின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா டிச., 3ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு, களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அதிகம் தேவைப்படும். ஒரு மாதத்துக்கு முன்பாக களிமண் விளக்குகளை தயார் செய்யும் பணியை, மண் பாண்ட தொழிலாளர்கள் தொடங்குவது வழக்கம்.
கரூரில் அண்ணா வளைவு, காளிப்பாளையம், தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு மற்றும் மாயனுாரில் அதிகளவில் மண் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, கோவில்களில் நாள்தோறும் பயன்படுத்தப்படும், ஐந்து முகம், ஒரு முகம் கொண்ட மண் விளக்குகள், சிறிய அளவிலான விளக்குகள் மின் மோட்டார் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும், 8 நாட்களே உள்ள நிலையில், களிமண் விளக்குகளை உற்பத்தி செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர் மழை மற்றும் களிமண் தட்டுப்பாடு காரணமாக விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விளக்குகளின் விலையும் சற்று உயர்ந்து வருகிறது.
மண் விளக்கு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மண் விளக்குகளை, வெயிலில் காயவைத்து, சூளையில் வைத்து சுட வேண்டும். தொடர் மழையால், மின்மோட்டார்கள் மூலம் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும், 1,000 விளக்குளை தனியாக சூளையில் வைத்து சுட்டால், அதிகளவில் செலவு ஏற்படுகிறது. இதனால் விளக்குகளின் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, 100 சிறிய விளக்குள், 80 ரூபாய், பெரிய விளக்குகள், 120 ரூபாய், ஐந்து முகம் கொண்ட விளக்கு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கரூர் மாவட்ட பகுதிகளில் களிமண் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் களிமண்ணை அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க மண் விளக்குகளை, சில தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டனர். கார்த்திகை தீப பண்டிகைககு மண் விளக்குகளுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

