ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்
ADDED : செப் 12, 2026 07:40 AM

கரூர்:கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
கரூர் மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிறு அன்று விடுமுறை வழங்க வேண்டும், பி.எப்., - இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 7 முதல் மாநகராட்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என, துாய்மை பணியாளர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நேற்று, ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்பட, பல்வேறு அமைப்பினர், துாய்மை பணியாளர்களை சந்தித்து, உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், 517 ஒப்பந்த துாய்மை பணியாளர்களில் சிலர் பணிக்கு திரும்பி உள்ளதாலும், 100க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள் பணியில் இருப்பதாலும், குப்பை அகற்றும் பணிகள் தொய்வின்றி நடப்பதாக, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
