ADDED : ஜூலை 01, 2025 01:01 AM
கரூர், கரூர் வெள்ளியணை சாலையில், தாழ்வான நிலையில் மின் கம்பிகள் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர் - திண்டுக்கல் சாலை வெள்ளியணை வழியாக தினமும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல இடங்களில் சாலையின் குறுக்கே மின் வழித்தடம் செல்கிறது. இதில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. அவ்வழியே செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளின் மீது உரசி, மின் விபத்து ஏற்படும் அபாயம் காத்திருக்கிறது.
தினமும் பள்ளி பஸ் உள்பட வாகனங்கள் செல்கின்றன. இங்கு செயல்படும் தனியார் சிமென்ட் நிறுவனம், விவசாய சாகுபடி ஆகியவற்றிக்கு அதிகம் பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அறுவடை இயந்திரங்கள் சென்று வருகின்றன. அப்போது உயரமான வாகனங்களில், மின் கம்பிகள் உரசி மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது. வைக்கோல் போன்ற எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை ஏற்றி வாகனங்கள் சென்றால், தீ விபத்து ஆபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும், மின் கம்பிகளை உரிய முறையில் உயர்த்தி கட்டவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில், மின் கம்பிகளை உரிய முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.