/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்காய் நாருக்கு கிராக்கி; கயிறு விலை திடீர் உயர்வு
/
தேங்காய் நாருக்கு கிராக்கி; கயிறு விலை திடீர் உயர்வு
தேங்காய் நாருக்கு கிராக்கி; கயிறு விலை திடீர் உயர்வு
தேங்காய் நாருக்கு கிராக்கி; கயிறு விலை திடீர் உயர்வு
ADDED : ஜன 16, 2025 07:11 AM
கரூர்: தேங்காய் நாருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய் கயிறுக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
கரூர் அருகே, தான்தோன்றிமலை பகுதியில், தேங்காய் நார் மூலம் கயிறு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 25க்கும் மேற்பட்ட பெண்கள், வீடுகளில் மெஷின் வைத்து கயிற்றை திரித்து விற்பனை செய்து வருகின்றனர். கயிறு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான தேங்காய் நார், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து விலைக்கு வாங்கி, கரூருக்கு கொண்டு வரப்பட்டு, கயிறாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த, 2022, 2023ல் போதிய மழை இல்லாததால், தேங்காய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தேங்காய் நார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த, 2024 ஆண்டு இறுதியில் தமிழகம் முழுவதும், பரவலாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்ததால், தேங்காய் உற்பத்தி நடப்பாண்டில்தான் அதிகரிக்கும். இதனால் தற்போது, தேங்காய் நாருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கயிறு விலையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கயிறு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது: தேங்காய் உற்பத்தி இருந்தால் மட்டும், கயிறு உற்பத்தி இருக்கும். உரித்த தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்க நார் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 35 கிலோ கொண்ட ஒரு கட்டு, 900 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை விற்றது. ஆனால், தேங்காய் உற்பத்தி குறைந்ததால், நாருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது, 35 கிலோ கொண்ட ஒரு தேங்காய் நார் கட்டு, 1,300 முதல், 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கயிறுக்கு விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 20 அடி நீளம் கொண்ட, 100 கயிறுகள், 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே அளவுள்ள கயிறு, 350 முதல், 400 ரூபாய் வரை விற்றது. இரண்டு ஆண்டுகளில், 100 ரூபாய் மட்டும் கயிறுக்கு விலை அதிகரித்துள்ளது. ஆனால், மூலப்பொருளான தேங்காய் நார் அதிக விலைக்குதான் கிடைக்கிறது. இந்த தொழிலில் பெண்கள்தான் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரைதான் ஊதியம் கிடைக்கும். இவ்வாறு, கூறினர்.

