ADDED : மே 26, 2024 07:10 AM
அரவக்குறிச்சி : கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், கரூர் மாவட்டம் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. பெரும்பாலான நாட்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம் திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகளை சுத்திகரிக்கும் செலவை மிச்சப்படுத்துவதற்காக, சாயப்பட்டறை உரிமையாளர்கள் சாயக்கழிவுநீரை அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது துாய்மையாக வரும் மழை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என நினைத்திருந்த வேளையில், சாயக்கழிவு நீர் கலந்து விட்டதால் விவசாயிகள் நீரை பயன்படுத்த முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நொய்யல் ஆறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.