/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரிய குளத்துப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட எதிர்பார்ப்பு
/
பெரிய குளத்துப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட எதிர்பார்ப்பு
பெரிய குளத்துப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட எதிர்பார்ப்பு
பெரிய குளத்துப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : பிப் 10, 2025 07:14 AM
கரூர்: பெரிய குளத்துப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே, வெங்கமேடு - பெரிய குளத்துப்பாளையம் இடையே, சேலம் - கரூர் ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு, கடந்த, 2013 முதல் ரயில்வே போக்குவரத்து நடந்து வருகிறது. கரூர் - சேலம் இடையே நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த, மூன்று மாதங்களில் கூடுதலாக, மதுரையில் இருந்து கரூர் வழியாக கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு, 'வந்தே பாரத்' ரயிலும் இயக்கப்படுகிறது. இதனால், ரயில்கள் செல்லும்போது, பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள, 'கேட்' மூடப்படுகிறது. அந்த சமயத்தில், பெரிய குளத்துப்பாளையத்தில் இருந்து, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கரூர் அருகே, பெரியகுளத்துப்பாளையம், சின்ன குளத்துப்பாளையம் பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிகள் உள்ளன. இதற்கிடையே ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சிறிய குகை வழிப்பாதை மட்டும் அமைக்கப்பட்டது. ஆனால், மழைக்காலங்களில் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கரூர் - சேலம் ரயில்வே வழித்தடம் முக்கிய பாதையாக மாறி வருகிறது.
அதிக ரயில்கள் செல்ல வாய்ப்புள்ளது. தற்போது, மின் பாதை அமைக்கப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப் படும். இதனால், பெரிய குளத்துப்பாளையத்தில், கரூர் - சேலம் ரயில்வே வழிதடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.