/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 28, 2025 01:31 AM
கரூர், நுண்ணீர் பாசன திட்டத்தில், 100 சதவீதம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சார்பில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு (100 சதவீத மானியத்தில்) நுண்ணீர் பாசன அமைப்புகள் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக, 1.35 லட்சம் ரூபாய் வரையிலும், இதர விவசாயிகளுக்கு (75 சதவீத மானியத்தில்) ரூபாய் 1.05 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. காய்கறி மற்றும் அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் சிறு விவசாயிகள், 5 ஏக்கர் வரையிலும், குறு விவசாயிகள், 2.50 ஏக்கர் வரையிலும் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க அளிக்கப்படுகிறது. இதர விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
சொட்டுநீர் பாசனம் அமைத்து, 7 வருடம் நிறைவுற்று இருந்தால், புதிதாக மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். மேலும், சேதமடைந்துள்ள உபகரணங்கள் (பக்கவாட்டு குழாய்) மட்டும் மானியத்தில் பெற்று சொட்டுநீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து மூன்று ஆண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டுநீர் பாசனமாக மாற்றி கொள்ளலாம்.
கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில், 1,500 ஹெக்டர் பரப்பில், 10.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புகைப்படம், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், அடங்கல், கூட்டு வரைபடம், கணினி சிட்டா, மறு ஆய்வு தீர்வு பதிவேடு, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்காக தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியும் அல்லது tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

