ADDED : ஜூலை 17, 2025 01:39 AM
கரூர், கரூர் அருகே, அடிப்படை வசதி இல்லாததால், புலியூர் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்., கணபதிபாளையம் பகுதியில், 75க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மழை பெய்யும்போது, அப்பகுதியில் மழைநீருடன், வீடுகளில் இருந்து கழிவுநீர் தேங்குகிறது. தார்ச்சாலை வசதி இல்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
புலியூர், கவுண்டம்பாளையம் பகுதியில் தார்ச்சாலை இல்லை. மண் சாலையில் தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழைக்காலத்தில், குழந்தைகள், பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக தார்ச்சாலை அமைத்து தரக்கோரி, கோரிக்கை வைத்தும் பலினில்லை. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது. திருச்சி பிரதான சாலையில் இருந்து, கணபதிபாளையத்துக்கு எளிதாக நடந்து செல்ல முடியவில்லை. இதனால், திருச்சி பிரதான சாலையில் இருந்து, கணபதிபாளையத்துக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை. அடிப்படை வசதிகளை, செய்து தரும் வகையில், புலியூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.