ADDED : நவ 16, 2024 01:23 AM
கரூர் வட்டாரத்தில் கன மழை
கரூர், நவ. 16-
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம் திடீரென கன மழை பெய்தது.
தென் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியிலும், ஒரு சில மாவட்டங்களிலும் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதல், பல இடங்களில் சாரல் மழை பெய்தது. மதியம், 2:00 முதல், 2:30 மணி வரை கரூர் டவுன், தான்தோன்றிமலை, சின்ன ஆண்டாங்கோவில், வெள்ளியணை, வாங்கல், புலியூர், திருகாம்புலியூர், சுக்காலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, காந்தி கிராமம், திருமாநிலையூர், கொளந்தானுார், மண்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், திடீரென குளிர்ந்த காற்றுடன் கன மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) அணைப்பாளையம், 2, க.பரமத்தி, 3.20, குளித்தலை, 2.20, தோகமலை, 4.40, கிருஷ்ணராயபுரம், 5.50, மாயனுார், 6, பாலவிடுதி, 5, மயிலம்பட்டி, 6 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.86 மி.மீ., மழை பதிவானது.