ADDED : அக் 11, 2025 12:43 AM
கரூர் :கரூர் மாவட்டத்தில், அணைப்பாளையம் மற்றும் க.பரமத்தியில் கன மழை பெய்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை காரணமாக, மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்டத்தில், பல பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. நேற்று காலை, 8:00 மணி வரை அணைப்பாளையத்தில், 81 மி.மீ., மழையும், க.பரமத்தியில், 76 மி.மீ., மழையும் பெய்தது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 15 ஆயிரத்து, 264 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக விநாடிக்கு, 13 ஆயிரத்து, 794 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.98 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.