ADDED : நவ 13, 2025 03:38 AM
கரூர்: கால நிலை மாற்றம் தொடர்பான, இணைய வழி சர்வதேச கருத்தரங்கில், கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின், யுனெஸ்கோ அமைப்பானது நிலையான வளர்ச்சிக்கான, 17 இலக்குகளை உலக நாடுகளிடம் பரிந்துரை செய்துள்ளது. இந்த இலக்குகளை அடைய, உலக நாடுகள் பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 13 வது இலக்காக அமைந்துள்ள கால நிலை மாற்றம் தொடர்பாக, இந்தியா நிலையான வளர்ச்சி மற்றும் கால நிலை தீர்வுகளுக்கான விரைவான கூட்டாண்மை என்ற தலைப்பில், 2025ம் ஆண்டிற்கான கருப்பொருளாக கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இதை சர்வதேச அளவில், பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்ல அமெரிக்காவை சேர்ந்த டேக் அக்சன் குளோபல் தன்னார்வ நிறுவனம், இணைய வழியில் கருத்தரங்கை நடத்தி வருகிறது. இதில் வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்நிறுவனத்தின் கால நிலை மாற்ற செயல் திட்ட இயக்குனர்கள் கோயன் டிம்மர்ஸ், ஜெனிபர் வில்லியம்ஸ் ஆகியோர் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கிராமி விருது பெற்ற பாடகர் மெக்லெமோர் சிறப்பாளராக கலந்து கொண்டார். அதில், மரம் வளர்த்தலின் அவசியம், தீவிர வானிலை மாற்றங்கள், கரிய மில வாயுக்களின் தாக்கம், மனித நடவடிக்கைகளினால் கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள், கிரீன் ஹவுஸ் வாயுக்களின் விளைவு, கடல் மட்ட உயர்வுக்கான காரணங்கள் போன்றவை குறித்து
பேசினர்.
இதையடுத்து, கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை ஆசிரியர் மனோகரன்
செய்திருந்தார்.

