ADDED : மார் 15, 2024 03:59 AM
புதிரைவண்ணார் சமூகத்தினர்
கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
கரூர்: 'தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக புதிரைவண்ணார் சமூகத்தினர் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட உள்ளது' என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிரைவண்ணார் சமூகத்தினரின், சமூக பொருளாதார நிலையைக் கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.
இந்த பணிக்காக இப்சோஸ் என்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தை, தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் நியமித்துள்ளது. இந்நிறுவனம், துறை அதிகாரிகள், புதிரைவண்ணார் நலவாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசணை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
குளித்தலை ஆர்.டி.ஓ.,
பொறுப்பேற்பு
குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ.,வாக தனலட்சுமி பொறுப்பேற்றார். இவர், மயிலாடுதுறை  கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிபுரிந்து இங்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். இங்கு பணியில் இருந்த ஆர்.டி.ஓ., ரவி, அரியலுார் கலெக்டரின் கூடுதல்  நேர்முக உதவியாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
புதியதாக பொறுப்பேற்ற ஆர்.டி.ஓ., தனலட்சுமிக்கு, தாசில்தார்கள் குளித்தலை சுரேஷ், கிருஷ்ணராயபுரம்  மகேந்திரன், கடவூர்   இளம்பருதி  மற்றும் தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார்கள், தனி தாசில்தார்கள், டி.எஸ்.ஓ.,க்கள் மற்றும் ஆர்.ஐ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பராமரிப்பு இல்லாத
தேசிய நெடுஞ்சாலை
கரூர்-
கரூர் வழியாக திருச்சி, சேலம், மதுரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. குறிப்பாக, சேலம், திருச்சி சாலைகள் பல இடங்களில்  குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.
ரிப்ளக்டர்களும் பழுதாகி இருப்பதால், அடிக்கடி இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. சுங்கம் வசூலிப்பு செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள். பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
வெள்ளியணையில்
குடிநீர் பிரச்னை
கரூர்: வெள்ளியணை சுற்று வட்டார பகுதிகளில், தண்ணீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை. இதனால், அன்றாட பயன்பாட்டிற்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறையால், தொலைவில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.
இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

