ADDED : மார் 18, 2024 03:33 AM
மது விற்ற 31 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 220 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 220 மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக சுந்தரன், 54, மாரியாயி, 43, உள்பட, 31 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
டீசல், டயர் திருடிய
2 பேருக்கு 'காப்பு'
அரவக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அய்யம்பாளையம் அருகே, சுள்ளிமடை புதுாரை சேர்ந்தவர் அருண்குமார், 39. இவர், கரூர் மாவட்டம், பவித்திரம் பகுதியில் செயல்படும் தனியார் கிரஷர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நத்தமேடு பகுதியை சேர்ந்த குமரவேல், 47, கரூர் மாவட்டம், தளவாய்பாளையம் கடைவீதியை சேர்ந்த முனுசாமி, 59, ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், பவித்திரம் பகுதியில் செயல்படும், டி.வி.எஸ்., நிறுவனத்தில் வைத்திருந்த, 60 லிட்டர் டீசல், லாரி டயர் ஒன்றை, குமரவேல், முனுசாமி ஆகிய இருவரும் திருடிச் சென்றனர். இதுகுறித்து கிரஷர் நிறுவன மேலாளர் அருண்குமார், க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அதன்படி, குமரவேல், முனுசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டும், குழியுமான
சாலையால் அவதி
கரூர்-
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு உள்ளது. அந்த வழியாக, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

