மாயனுார் கதவணையில் இறுதி கட்டத்தில் பராமரிப்பு பணி
மாயனுார் கதவணையில் இறுதி கட்டத்தில் பராமரிப்பு பணி
ADDED : செப் 03, 2026 06:03 AM

கரூர்:மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாயனுார் கதவணையில் பராமரிப்பு பணி நடந்தது.
ஆண்டுதோறும் டெல்டா பாசன பகுதிக்கு, மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் போதிய, தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள, அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து, தாளடி மற்றும் சம்பா சாகுபடிக்காக, முதல்வர் விஜய் தண்ணீரை திறந்து விட்டார்.
முதல் கட்டமாக வினாடிக்கு, 7,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று அதிகாலை, கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் பகுதிக்கு வந்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்று அதிகாலை, மாயனுார் கதவணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, வெளியான நிலையில் மாயனுார் கதவணையில் ஷட்டர்கள், மதகுகள் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் தொடங்கின.
தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
