ADDED : செப் 01, 2025 02:16 AM
அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை என, மூன்று வகையான விவசாய முறைகள் முருங்கை உற்பத்தியில் கையாளப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கியது. கடந்த மாதம், மர முருங்கை ஒரு கிலோ, 8 ரூபாய்க்கும், செடி முருங்கை, 10 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது விலையில் கணிசமாக மாற்றம் செய்யப்பட்டு மர முருங்கை, 24 ரூபாய்க்கும், செடி முருங்கை, 38 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 37 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முருங்கை விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.