ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பல்வேறு மாவட்டங்களில், பானி பூரியில் உடல் நலத்தை கெடுக்கும் வகையில், செயற்கை நிறமூட்டி கலப்பதாக புகார் எழுந்தது. இதனால், பானி பூரி விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரூரில், கோவை சாலையில் பானி பூரி விற்பனை செய்து வரும் துருகேஷ், 25; என்பவரின் தள்ளு வண்டி கடையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மதுரை வீரன், 52; நேற்று மாலை சோதனை நடத்தினார். அப்போது, பழைய பிளாஸ்டிக் கேனில், பானி பூரிக்கு தரப்படும் ரசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், பினாயில் ஊற்றி ரசம் அழிக்கப்பட்டது. அதேபோல், கரூர் தாலுகா அலுவலகம் அருகே, பெரியசாமி, 45; என்பவர் நடத்தி வரும் பானி பூரி கடையிலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆய்வுக்காக உணவு பொருட்களை கொண்டு சென்றனர்.