ADDED : மே 26, 2026 04:30 AM
தென்மேற்கு பருவமழை தொடர்பாக
கரூர்:- கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, கலெக்டர் முத்துக்குமரன் பேசியதாவது:
தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தொடங்கவுள்ள நிலையில், தேவையான முன்னேற்பாடு மேற்கொள்ள வேண்டும். வருவாய், மருத்துவம், உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, மின்சாரம், வேளாண்மை, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பருவ மழையால், கரூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடும் என, 68 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மழைக்கு முன்பாக அந்த பகுதிகளை ஆய்வு செய்து, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து துறைகளிலும் உள்ள மீட்பு பணிக்கான உபகரணங்கள், வேலை செய்யும் நிலையில் உள்ளதா என சரிபார்த்து, அதன் இருப்பினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04324-256306 என்ற தொலைபேசி எண்ணிலும் பேரிடர் தொடர்பான புகார்களை அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாநகராட்சி கமிஷனர் சுதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா உள்பட பலர் பங்கேற்றனர்.
