ADDED : மார் 07, 2026 03:58 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறில் உள்ள திருவேலீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியொட்டி, நேற்று காலை, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. அதன்பின், சனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* நாமக்கல்-துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி அடுத்த கந்தகிரி கூலிப்பட்டியில் பழனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரம், வன்னி மரத்தடியில் சனிபகவான் தனி சன்னதியாக எழுந்தருளியுள்ளார்.
இங்கு, நேற்று காலை சனிப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு ஹோம பூஜை நடந்தது. 8:24 மணிக்கு சனி பகவான் மற்றும் சுவாமிகளுக்கு அலங்காரம், பூஜை செய்து மகா தீபம், கற்பூர தீபம் ஏற்றப்பட்டது.
