ADDED : ஏப் 28, 2024 04:17 AM
கரூர்: நாளை முதல்(ஏப்.,29)- கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், கோடைக்கால பயிற்சி முகாம் நாளை முதல் மே, 13- வரை நடக்கிறது. தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஜூடோ, வளைகோல்பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். முகாமில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், மாணவரல்லாத, 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேரும்போது, ஆதார் நகல் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
முகாமில் பங்கேற்பவர்கள் சந்தா தொகையாக, 200 ரூபாய் செலுத்த வேண்டும். பங்கேற்க விரும்புபவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 74017 03493 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
