ADDED : ஜன 11, 2024 11:42 AM
பிள்ளபாளையம் பஞ்சாயத்தில்
கொசு ஒழிப்பு பணி தீவிரம்
பிள்ளபாளையம் பஞ்சாயத்து பகுதிகளில், கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்து வார்டுகளில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்தது. இதில், குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுபுறத்துாய்மை, கழிவு நீர் தேங்காமல் இருக்க ஆலோசனை வழங்குதல், மழை காலங்களில் மழை நீர் அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல் மற்றும் சாலையோர பகுதியில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் சுகாதார துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டனர்.
ஆண்டாங்கோவில் பகுதியில்
சிக்னல் அமைக்க வேண்டும்
கரூர்- கோவை சாலையில் ஆண்டாங்கோவில் லட்சுமிபுரம், வளர்ந்து வரும் நகராக உள்ளது. அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உருவாகியுள்ளது. மேலும், நாள்தோறும் அந்த பகுதியில், அதிக வாகனங்கள் சென்று வருகிறது. இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கரூர்-கோவை சாலை லட்சுமிபுரம் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
சாக்கடை கால்வாயை
துார்வார வேண்டுகோள்
கரூர் படிக்கட்டு துறை பகுதியில், சாக்கடை கால்வாய் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, படிக்கட்டுதுறை
பகுதியில் செல்லும், கால்வாயை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.