ADDED : பிப் 20, 2024 10:53 AM
மதுபாட்டில்களை அகற்ற
மக்கள் வேண்டுகோள்
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு அருகே, காலி இடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதியில், உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடக்கிறது. அந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், மது அருந்துவோர் மீது கடும்
நடவடிக்கை எடுத்து, சிதறி கிடக்கும் மதுபாட்டில்களை, விரைவாக
அப்புறப்படுத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போர்வெல் குழாயை சீரமைக்க
பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
கரூர்- கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் குழாய் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
தற்போது அந்த போர்வெல் குழாய் பழுதடைந்து விட்டது. குறிப்பாக கைப்பிடி கூட இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் தேவைகளுக்காக, போர்வெல் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். போர்வெல் குழாயை சரி செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள, நிலையில் போர்வெல் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கழிப்பிடத்தை பராமரிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர் அருகே, கருப்பம்பாளையம் சாலை காமராஜர் நகரில், மக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் சேதம் அடைந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் தெரிவித்தும், வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல், காலம் கடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் திறந்த வெளிப்பகுதியை,
கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். எனவே, காமராஜர்
சாலையில் சேதம் அடைந்த நிலையில் உள்ள, கழிப்பிடத்தை
சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

