/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 3வது திருமணம் 'கல்யாண ராணி' கைது
/
கரூரில் 3வது திருமணம் 'கல்யாண ராணி' கைது
ADDED : டிச 26, 2024 05:53 AM

கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 30, கொசு வலை கம்பெனி ஊழியர்.
இவருக்கும், கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரேணுகா, 36, என்ற பெண்ணுக்கும் கடந்த, 12ல், மண்மங்கலம் பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர், கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன், திருமணம் நடந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ரேணுகாவிடம், ரமேஷ் கேட்டபோது, ஆத்திரமடைந்த ரேணுகா, வரதட்சணை வழக்கு தொடர்வேன் என ரமேஷை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ரமேஷ், கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதையறிந்த ரேணுகா, நேற்று முன்தினம் இரவு வெளியூருக்கு தப்பிச் செல்ல, கரூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது, கரூர் மகளிர் போலீசார், ரேணுகாவை கைது செய்தனர்.
மேலும், ரமேஷ் - ரேணுகா திருமணத்துக்கு ஏற்பாடு செய்த, கோவையைச் சேர்ந்த புரோக்கர்கள் ஜெகநாதன், ரோஷினி, தேவக்கோட்டையைச் சேர்ந்த பழனிகுமார் ஆகியோரை, மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

