ADDED : பிப் 09, 2025 01:07 AM
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்துார், இந்திரா நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக, குடிநீர் வழங்க வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் விவசாய கிணறுகள் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள போர்வெல் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் எடுத்து வரவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலை, 9:00 மணிக்கு இருமத்துார் செல்லும் சாலையில், காலி குடங்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், உடனடியாக தண்ணீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
