/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற யோசனை
/
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற யோசனை
ADDED : ஏப் 11, 2025 01:27 AM
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற யோசனை
ஈரோடு:உயிர் உரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற, வேளாண் வல்லுனர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலை உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்து, தழை, மணி சத்தாகும். இவ்விரண்டு சத்துகளும் இயற்கையாக பயிருக்கு எட்டா நிலை உள்ளது. இச்சத்தை கூட்டு மற்றும் தனித்து வாழும் பாக்டீரியாக்கள் கிரகித்து பயிருக்கு வழங்கும். நெல் வயல்களில் தழை, சாம்பல் சத்தை நிலை நிறுத்த, அசோஸ்பைரில்லம், அசட்டோ பேக்டர், பாஸ்போ பேக்டீரியா, அசோலா பெரும் பங்காற்றும். அசோஸ்பைரில்லத்தை ெஹக்டேருக்கு பரிந்துரைக்கப்படும் விதையுடன், 600 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்து அல்லது நாற்றுகளை பறித்து, அதன் வேர்களை அசோஸ்பைரில்லத்தில் நனைத்து நட்டால் தழைச்சத்து உர பயன்பாட்டை குறைக்கலாம்.
இதை பின்பற்றாத நிலையில், ெஹக்டேருக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லத்தை, 25 கிலோ மக்கிய குப்பையுடன் கலந்து, நடவுக்கு முன் வயலில் இடலாம். பாசி வகையை சேர்ந்த நீலப்பச்சை பாசி, பெரணி வகை அசோலாவும் நெல் வயலில் தழைச்சத்தை வழங்கும்.
மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைத்து, பயிருக்கு வழங்கும் பாஸ்போபேக்டீரியா, வளர்ச்சி ஊக்கிகளை சுரக்கும். மணிச்சத்தின் தேவை குறைந்து, பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். நெற்பயிரின் வேர்களில் நுழைந்து, வேரிழைகளை உண்டாக்கி, தொலைவில் உள்ள மணிச்சத்தை ஈர்த்து வழங்குவதில் மைக்கோரைசா முக்கிய பங்காற்றும். அசோஸ்பைரில்லத்தை போல, இந்த நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி, விதை நேர்த்தி, நிலத்தில் இடுதல் மூலம் மணிச்சத்துக்கான ரசாயன இடுபொருட்களின் தேவையை குறைக்கலாம்.
ெஹக்டேர் நெல் வயலில் தனித்து வாழும் பாக்டீரியாவான அசட்டோபேக்டர், 15 கிலோ, நீலப்பச்சை பாசி, 40 கிலோ, இணை வாழ்க்கை நடத்தும் பாக்டீரியாவான அசோஸ்பைரில்லம், 35 கிலோ தழைச்சத்தையும் நிலை நிறுத்தும். கூட்டு வாழ்க்கை நடத்தும் அசோலா, 40 முதல், 60 கிலோ தழைச்சத்தையும், பசுந்தாள் உரப்பயிர்கள், 80 கிலோ தழைச்சத்தையும் பயிருக்கு வழங்கும்.
இத்தகைய நுண்ணுயிர்கள் வளர் ஊக்கிகளையும் சுரப்பதால், பயிர் செழுமையாக வளர உதவும். மண்ணில் உள்ள அங்ககச்சத்துடன் நுண்ணுயிர்கள் சேர்த்து வாழ்வதால் மண் வளம் பாதுகாக்கப்படும். நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.