'வத்தல்மலையில் விவசாயம், சுற்றுலாவை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்'
'வத்தல்மலையில் விவசாயம், சுற்றுலாவை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்'
ADDED : ஏப் 17, 2026 02:24 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, தர்மபுரி ஒன்றியம் கோடுஹள்ளி, கொண்டகரஹள்ளி, முக்கல்நாய்க்கன்பட்டி உள்ளிட்ட, 10 ஊராட்சிகளில், வத்தல்மலை உள்ளிட்ட, 56 கிராமங்களில் நேற்று, தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் துாவியும், பட்டாசு வெடித்தும் மேள தாளங்கள் முழங்க, வத்தல்மலை கிராம மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வேட்பாளர் பழனியப்பன் பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாய், இல்லத்தரசிகள் திட்டம் மூலம், 8,000 ரூபாய் கூப்பன், இதன் மூலம் மின்சாதன பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இப்பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை, நன்கு அறிவேன். நான் வெற்றி பெற்றவுடன் இந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண்பேன். வத்தல்மலை பகுதியின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவை தடுக்க, மலை பாதைகளில் கூடுதல் தடுப்புச் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் காப்பி உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்ய, நேரடி கொள்முதல் மையம் மக்கள் மழை பகுதிகளில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். பொதுமக்கள் வத்தல் மலைபகுதிகளில் இருந்து கடத்துார், தர்மபுரி ஒன்றியங்களுக்கு சென்று வருகின்றனர். அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி தாலுகாவுக்கு சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அனைத்தும் தர்மபுரியை மையமாக கொண்டு செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.
இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த, தி.மு.க., தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்க, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி மக்களின் குரலாக சட்டசபையில் ஒலிக்க, எனக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இதில், ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாது, டாக்டர் பிரபு ராஜசேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
