ADDED : ஜன 17, 2025 12:55 AM
ஓசூர்: ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி எருதுகள், அதனுடன் வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க அழைத்து வரப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வண்ண பலுான்கள், ஆடைகள் மற்றும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட காளைகள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்தன.
அவற்றை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி, பரிசு பொருட்களை பெற்று சென்றனர். எருதுவிடும் விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். நிகழ்ச்சியில் ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் நாகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* காவேரிப்பட்டணத்தில் நேற்று எருது கட்டு விழா நடந்தது. மதியம், 2:00 மணிக்கு, எருதுகளை குளிப்பாட்டி, வண்ணம் தீட்டி கொம்புகளில் அலங்கார தட்டிகளை கட்டி, சேலம் சாலையிலுள்ள விநாயகர் கோவில் முன்பு பூஜை செய்தனர். பின்னர் எருதுகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இளைஞர்கள் சாலை நடுவே நின்று எருதுகளுக்கு ஆட்டம் காட்டியதால், எருது முட்டி சிலர் காயமடைந்தனர். விழாவை காண, 5,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இரவு, ஆடல், பாடல், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு, கந்திகுப்பம், கிட்டம்பட்டி, லைன்கொள்ளை ஆகிய பகுதிகளில் எருதுகட்டு விழா நடந்தது.
