பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 15, 2026 05:59 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், தீயணைப்பு மீட்பு பணித்துறையில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கடந்த, 1944 ஏப்., 14ல் மும்பை துறைமுகத்தில் வெடிபொருட்கள் ஏற்றி நிறுத்தி வைத்திருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மக்கள் பலர் உயிரிழந்தனர். மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து நாசமானது. இதில், தீயை அணைக்கும் பணியின்போது உயிரிழந்த, 66 தீயணைப்புத்துறை வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 14ல் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு
வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் போது தன் உயிரை தியாகம் செய்து பிற உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்றியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமை வகித்து, நினைவு துாணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், நிலைய அலுவலர் (போக்குவரத்து) அந்தோணிசாமி, நிலைய அலுவலர்கள், ஓசூர் நாக விஜயன், போச்சம்பள்ளி சக்திவேல், ராயக்கோட்டை கண்ணியப்பன், பர்கூர் சேட்டு, ஊத்தங்கரை ராமமூர்த்தி, முன்னணி தீயணைப்பு அலுவலர் விஜயகுமார், கிருஷ்ணகிரி முன்னனி தீயணைப்பாளர் சற்குணன் உள்பட தீயணைப்புத்துறை பணியாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறந்தவர்களுக்காக, 2 நிமிட மவுன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
