/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் ஏரிக்கரையில் ஆபாச "சிடி'க்கள் எரிப்பு
/
ஓசூர் ஏரிக்கரையில் ஆபாச "சிடி'க்கள் எரிப்பு
ADDED : ஜூலை 14, 2011 11:33 PM
ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரியில், இரவு நேரத்தில் பல ஆயிரம் ஆபாச மற்றும் புதுப்பட 'சிடி' க்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே ராமநாயக்கன் ஏரி உள்ளது. நீர் வரத்து கால்வாய்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், ஏரி நீரில்லாமல் வறண்டு காணப்படுகிறது. சுற்று வட்டார குடியிருப்புகளின் சாக்கடை நீர்தான் ஏரியில் செல்கிறது. நேற்று காலை இந்த ஏரியில் பல்வேறு இடங்களில், 500க்கும் மேற்பட்ட ஆபாச மற்றும் புதுப்பட 'சிடி' க்கள் சிதறி கிடந்தது. மூன்று இடங்களில், 'சிடி'க்கள், புது 'சிடி' ரேப்பர்கள் ஆகியவை மலைப்போல் குவிக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் புதுப்பட 'சிடி' தயாரிப்பு நபர்கள் 'சிடி' க்களை தீயிட்டு எரித்துள்ளனர். தீ நேற்று காலை வரை எரிந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான 'சிடி'க்கள், ரேப்பர்கள் சாம்பலாகி புகைந்து கொண்டு இருந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏரிக்கரையில் எரியாமல் கிடந்த மிஞ்சிய 'சிடி' க்களை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் எடுத்துச் சென்றனர். 'சிடி'க்கள் எரிந்த இடத்தில் போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஓசூர் டவுன் பகுதியில், உள்ளூர் அரசியல் புள்ளிகள் ஆதரவுடன் வீடுகளை வாடகைக்கு எடுத்து புதுப்படம் மற்றம் ஆபாச 'சிடி' க்களை தயாரிக்கின்றனர். தமிழ் புதுப்படங்கள் மட்டுமின்றி, தெலுங்கு திரைப்படம், ஆபாச படங்களை 'சிடி'யில் தயாரித்து வெளிமாநிலங்களில் மட்டுமின்றி சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க, போலீஸாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 'சிடி' தயாரிப்பு கும்பல், இரவோடு இரவாக தயாரித்து வைத்திருந்த 'சிடி'க்களை ராமநாயக்கன் ஏரியில் எரித்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

