ADDED : ஏப் 06, 2025 01:03 AM
யானைகளால் பயிர்கள் நாசம்
தேன்கனிக்கோட்டை:ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 3 யானைகள், தளி அருகே கோட்டை மடுகு பஞ்., உட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்திற்கு வந்தன. அப்பகுதி நிலங்களுக்குள் புகுந்த யானைகள், கோவிந்தரெட்டி, வினய், யசோதம்மா ஆகியோரது, தலா ஒரு ஏக்கர் தக்காளி தோட்டம், பிரமிளம்மா, பைய்யாரெட்டி என்பவரது ஒன்றரை ஏக்கர் நெல் வயல்களை சேதப்படுத்தின. வனத்துறையினர் யானைகளை விரட்டாமல், மெத்தன போக்குடன் இருப்பதால் பயிர்கள் சேதமாகி வருவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதேபோல், உனிசேநத்தம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரது சாமந்தி தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், பயிர்களை சேதப்படுத்தின. சேதமான பயிர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்கவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.