/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இறைவணக்க கூட்டத்திற்கு இடமில்லை
/
இறைவணக்க கூட்டத்திற்கு இடமில்லை
ADDED : ஆக 28, 2025 01:16 AM
ஓசூர், ஓசூரில், காலையில் இறைவணக்க கூட்டம் நடத்த கூட அரசு மாநகராட்சி பள்ளியில் போதிய இடமில்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில் கடந்த, 1960 முதல், சூடவாடி அரசு மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்குகிறது. ஓசூர் மலைக்கோவில் அடிவாரத்தில் சிறிய பாறை மீது, இப்பள்ளிக்கு கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியராக பவுன்துரை உள்ளார்.
இப்பள்ளியில் மொத்தம், 486 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி சீருடைகள் வழங்கப்பட்டு, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் இப்பள்ளி செயல்படுகிறது. மாவட்டத்திலேயே துவக்கப்பள்ளிகளில் அதிகப்பட்சமாக நடப்பாண்டு, 162 மாணவ, மாணவியர் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆனால், இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.
அதுமட்டுமின்றி, காலையில் இறைவணக்க கூட்டம் நடத்த கூட இடவசதி இல்லாததால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இறைவணக்க கூட்டம் நடக்கிறது. பள்ளி முன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, 108 அடுக்குமாடி வீடுகள் பயன்பாடின்றி, 15 ஆண்டுக்கும் மேலாக உள்ளது. அதை இடித்து விட்டு, பள்ளிக்கு விளையாட்டு மைதானத்திற்கும், இறை வணக்க கூட்டத்திற்கும் இடத்தை வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசு, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் உள்ளது. மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறும் போது, 'பாழடைந்த வீட்டு வசதி வாரிய வீடுகளில் நடக்கும் சமூக விரோத செயல்களால், தினமும் மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வீடுகளை இடிப்பதாக கூறி, நாட்களை கடத்தி வருகிறது. அரசு தலையிட்டு, வீடுகளை இடித்து இறைவணக்க கூட்டம், விளையாட்டு மைதானத்திற்கு இடத்தை வழங்க வேண்டும். இப்பள்ளி தலைமையாசிரியர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர் பள்ளிக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளார். அவர் பணி தொடர, இப்பள்ளியின் ஆலோசகராக நியமிக்க வேண்டும்' என்றனர்.