ADDED : செப் 16, 2026 06:10 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வரும்
நிலையில் கடந்த, 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை
முதல் கடுமையான வெப்பம் வாட்டிய நிலையில் இரவு, 8:30 மணிக்கு,
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பர்கூர் மற்றும் ஓசூரில் மழை
பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரி நகரில் பலத்த காற்று மற்றும்
இடியுடன் கூடிய கன மழை ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின்
பல சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பல இடங்களில்
சாக்கடை கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து கடும் துர்நாற்றத்துடன்
சாலையில் ஓடியதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பலத்த
மழையால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும்
மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை மையம் அறிவித்துள்ளதால்,
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று
காலை, 8:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அதிகபட்சமாக அஞ்செட்டி மற்றும் தளியில் தலா, 40 மி.மீ., மழை பதிவாகி
இருந்தது. அதே போல், ஓசூர், 36.5, நெடுங்கல், 34, கெலவரப்பள்ளி, 30,
தேன்கனிக்கோட்டை, 23, கிருஷ்ணகிரி, 10.2, போச்சம்பள்ளி, 7,
சூளகிரி, 6, பாரூர், ராயக்கோட்டை, சின்னாறு அணை தலா, 5, கே.ஆர்.பி.,
அணை, 4.4 என மொத்தம், 246.1 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
* ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றிரவு, 7:00 மணிக்கு மேல், மிதமான மழை கொட்டி தீர்த்தது.
ஓசூர்
பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரின் பல இடங்களில், மழைநீர் தேங்கியதால், வாகன
ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர் மழையால், மானாவாரி சாகுபடியில்
ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
